Publish Date: Thu, 25 Oct 2007 (10:44 IST)
Updated Date: Thu, 25 Oct 2007 (10:44 IST)
அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சனையில் இடசாரி கட்சிகளுக்கு 3வது அணி முழுமையாக ஆதரிப்பதாக சந்திரபாபு நாயுடு கூறினார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் இதுபற்றி விவாதிக்க தீபாவளிக்கு பின் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக ஆதரவு திரட்ட இடதுசாரி தலைவர்கள் முடிவு செய்தனர். அதன் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், 3-வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட அந்த அணி தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் 3-வது அணியின் அமைப்பாளரும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது பாராளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினை வரும்போது, அதை இடதுசாரிகளுடன் இணைந்து 3-வது அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பார்கள் என்று சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது.
இதன் பிறகு சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், அணுசக்தி பிரச்சினையில் இடதுசாரிகள் எடுத்துள்ள நிலைக்கு, ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் மெஜாரிட்டி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், ஒப்பந்தத்தை அரசு அமலாக்கக் கூடாது என்றார்.
கடந்த 22ஆம் தேதி எங்கள் கூட்டணி கூடும் முன், இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஜெயலலிதாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் முக்கிய வேலையாக இருந்ததாக தெரிகிறது என்று சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார்.
சந்திப்புக்கு பின் இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் பரதன், சமீம் பைசி ஆகியோர் கூறுகையில், பொருளாதார கொள்கைகள் விஷயத்திலும் சந்திரபாபு நாயுடு எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இது நல்ல முடிவு. பாராளுமன்ற ஜனநாயகத்தில், மக்களின் விருப்பங்களை மக்களவைதான் பிரதிபலிக்கிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், முக்கிய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Thu, 25 Oct 2007 (10:44 IST)
Updated Date: Thu, 25 Oct 2007 (10:44 IST)