Publish Date: Wed, 24 Oct 2007 (15:28 IST)
Updated Date: Wed, 24 Oct 2007 (15:28 IST)
கவிஞர் மதுமிதா கொலை வழக்கில் உத்திரப் பிரதேச முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி மற்றும் அவரது மனைவிக்கு ஆயுள் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி உ.பி. மாநிலம் லக்னோவில் ரிவர் பேங்க் காலனியில் 26 வயதான கவிஞர் மதுமிதா படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவ்வழக்கில் அப்போதைய உ.பி. அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.
மதுமிதாவுக்கு உ.பி. முன்னாள் அமைச்சர் திரிபாதிக்கும் இடையேயான உறவுதான் அவர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்று மதுமிதாவின் சகோதரி நிதி குற்றம் சாற்றியதைத் தொடர்ந்து இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்த வழக்கில் நிதியும், அவர்கள் வீட்டு வேலைக்காரர் தேஷ்ராஜிம்தான் முக்கிய சாட்சிகள். இது தவிர மேலும் 7 சாட்சிகள் உண்டு. உத்திரப் பிரதேச மாநிலத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றால் நியாயமாக இருக்காது என்றும், எனவே வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மதுமிதா குடும்ப தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. இவ்வழக்கு விசாரணை பின்னர் மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வி.பி. ராய் முன்பு நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் 79 சாட்சிகளை நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) நிறுத்தியது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை டெல்லிக்கு மாற்றிய பின்னர் விரைவாக நடத்தப்பட்டது. மதுமிதா திரிபாதியின் குழந்தையை கருவில் சுமப்பதை விரும்பாத அமர்மணி திரிபாதியும், அவரது மனைவி மதுமணியும் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர் என்று மத்திய புலனாய்வுக் கழகம் சாட்சிகளுடன் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வி.பி. ராய் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், இவ்வழக்கில் குற்றவாளிகளான உ.பி. முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி, அவர் மனைவி மதுமணி மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்குவதாக உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்டுள்ள ரோஹித் சதுர்வேதி மற்றும் சந்தோஷ் ராய் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி, குற்றம்சாற்றப்பட்ட பிரகாஷ் பாண்டேவை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.
இதனிடையே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக உத்திரப் பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினருமான அமர்மணி திரிபாதியின் வழக்கறிஞர் விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்.
மத்திய புலனாய்வுக் கழகத்தின் விசாரணை குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப் போவதில்லை என்றும், ஆனால் அமர்மணி திரிபாதி மற்றும் மதுமணி தொடர்பான அதன் குற்றச்சாற்று தொடர்பான தகவல்கள் தமக்கு திருப்தியாக இல்லை என்று கூறினார்.