Publish Date: Mon, 15 Oct 2007 (13:49 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (13:49 IST)
சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாவதற்கு காரணமாகும் கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 30 நிமிடத்தில் எச்சரிக்கம் இந்தியாவின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது!
தேசிய சுனாமி, புயல் முன்னெச்சரிக்கை அமைப்பு ஹைதராபாத்தில் இன்று நடந்த விழாவில் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முன்னிலையில் இந்தியாவின் நிலவியல் விஞ்ஞானிகள் உருவாக்கிய இவ்வமைப்பை மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேச கடல் தகவல் சேவைகள் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுனாமி எச்சரிக்கை அமைப்பு, நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஆழிப்பேரலைகள் (சுனாமி) தாக்கும் அபாயத்தை 30 நிமிடங்களுக்குள் உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளிக்கும்.
மத்திய விஞ்ஞானம், தொழில்நுட்பத் துறை, இந்திய விண்வெளித் துறை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பேரவை ஆகிய இணைந்து ரூ.125 கோடி செலவில் புவி விஞ்ஞான அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளன. இவ்வமைப்பே சுனாமி எச்சரிக்கை அமைப்பு மையத்தை இயக்கும்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் உருவான ஆழிப்பேரலைகள் தாக்கி இந்திய கடலோரப் பகுதிகளில் மட்டும் 14,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளதாகவும், அந்த அமைப்பை இன்று அளித்துள்ளதாகவும் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
இந்த மையத்தில் இருந்து அளிக்கப்படும் எச்சரிக்கை உடனடியாக நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செயற்கைக்கோள் மூலமாக இயக்கப்படும் தனி அமைப்பின் வாயிலாக நில நிமிடங்களுக்குள் தெரிவிக்கப்படும்.
Webdunia
Publish Date: Mon, 15 Oct 2007 (13:49 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (13:49 IST)