Publish Date: Sat, 13 Oct 2007 (11:05 IST)
Updated Date: Sat, 13 Oct 2007 (11:04 IST)
தமிழக முதலமைச்சர் கருணாநிதி மீது அ.தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு பதற்றம் நிறைந்த பிரச்சனையா? ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்? என்று அ.தி.மு.க. வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முழு அடைப்பு நடத்த முடிவு செய்தது. இது தொடர்பான வழக்கில், முழு அடைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, முழு அடைப்புக்கு பதிலாக உண்ணாவிரதம் நடந்தது. ஆனால், தடையை மீறி முழு அடைப்பு நடந்ததாக கூறி, அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டு இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி முழு அடைப்பு காரணமாக, அரசியல் சட்ட சீர்குலைவு ஏற்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யவும் தயங்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் கடந்த 4ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலாளர், காவல் துறை தலைவர் மற்றும் அதிகாரிகள், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.அகர்வால், வி.எஸ்.சிர்புர்கர் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று பரிசீலனைக்கு வந்தது. அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்ட அனைவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டனர். விவாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இது என்ன பதட்டம் நிறைந்த பிரச்சினையா, ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்?'' என்று அ.தி.மு.க. வழக்கறிஞரை பார்த்து கேட்டனர். அப்படி ஒன்றும் இல்லை என்று அ.தி.மு.க. வழக்கறிஞர் பதில் அளித்தார்
பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்புவது பற்றி முடிவு செய்வோம். மனுதாரர் வாய்மொழியாக சொல்வது உண்மை என்று தெரிய வந்தபிறகுதான் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.
உங்களுடைய உறுதிமொழியில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினை தொடர்பான பிரதான வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' என்றனர்.