Publish Date: Wed, 10 Oct 2007 (15:07 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (15:07 IST)
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்காது, எனவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இடைத்தேர்தல் வரும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
பாட்னா விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அத்வானி, ''2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும். அதுவும் முதல் காலாண்டில் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்'' என்றார்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளுக்கும், காங்கிரசுக்கும் இடையில் நிலவும் மோதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசாத அத்வானி, '' இடைத்தேர்தல் வருவதற்கான சூழலை உருவாக்குபவர்கள் வருகின்ற தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெறமுடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
''தங்களின் நம்பகத்தன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தேர்தல் தோல்விகளைச் சமாளிப்பதுதான் அவர்களுக்கு உள்ள பெரிய சிக்கல்'' என்றும் அத்வானி கூறினார்.
பின்னர் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான கைலாசபதி மிஸ்ராவின் 85 ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
Webdunia
Publish Date: Wed, 10 Oct 2007 (15:07 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (15:07 IST)