Publish Date: Tue, 09 Oct 2007 (20:52 IST)
Updated Date: Tue, 09 Oct 2007 (20:52 IST)
கர்நாடகத்தில் மீண்டும் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் முதல்வரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா உறுதியுடன் கூறியுள்ளார்!
பெங்களரூவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, பா.ஜ.க. இடைத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறது என்றும், தங்களின் சொந்த பலத்துடன் ஆட்சிக்கு வருவோம் என்றும் தெரிவித்தார்.
மதசார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ.க.வும் மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சி நடக்கிறது என்று எழுந்த வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்த அவர், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு எதிராக நடத்தப்படும் தர்ம யுத்தத்தில் மீண்டும் ஜெயிப்போம் என்றார்.
மேலும், மதசார்பற்ற ஜனதாதளத்தின் துரோகத்தையும், அநீதியையும் மக்களிடத்தில் கொண்டு செல்வோம். அதற்கான பரப்புரை நேற்று தும்கூரில் தொடங்கிவிட்டது. கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் பரப்புரை செய்யப்படும் என்று எடியூரப்பா கூறினார்.