Publish Date: Tue, 09 Oct 2007 (13:09 IST)
Updated Date: Tue, 09 Oct 2007 (13:08 IST)
நாகாலாந்தில் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து சாலையிலிருந்து தவறி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் இறந்தனர்.
நாகாலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான மொக்கோக்சுங் நகரத்தில் இருந்து அஸ்ஸாம் எல்லையில் உள்ள துளி நகரத்திற்குப் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.
மலைப்பகுதியில் சுமார் 13 கி.மீ. தூரம் வந்தபோது குறுகிய வளைவில் வேகமாகத் திரும்ப டிரைவர் முயற்சித்தார். அப்போது பேருந்து நிலைதடுமாறி 150 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 39 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் 6 பேர் இறந்தனர்.
மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லேசான காயத்துடன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.