Publish Date: Tue, 09 Oct 2007 (10:24 IST)
Updated Date: Tue, 09 Oct 2007 (10:22 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சிக்கான அறிவிப்பு இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி, கவர்னர் ராமேஷ்வர் தாகூரிடம், தனது ராஜினாமா கடிதத்தை நேற்று இரவு ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து கவர்னர் சட்ட நிபுணர்களுடன் அடுத்தகட்ட ஆலோசனையை நடத்தினார். பிறகு கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் ராமேஷ்வர் தாகூர், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
கவர்னரின் பரிந்துரை கிடைத்தும் காங்கிரசின் உயர்மட்ட தலைவர்களி்ன் கூட்டம் நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், ஏ.கே அந்தோனி, எச்.ஆர். பரத்வாஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 30 நிமிடங்கள் நடந்தது.
இன்று மத்திய அமைச்சரவை கூடி, அதிகாரபூர்வமாக கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட் சி அமைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும். இதனை தொடர்ந்து அதிகாரபூர்வமாக ஜனாதிபதி ஆட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்படு்ம்.