Publish Date: Fri, 05 Oct 2007 (19:56 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (19:56 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையின் பார்வையின் கீழ் கொண்டுவரப்படும் நமது நாட்டின் அணு உலைகள் தொடர்பாக சாதாரண நிலை பேச்சு நடந்து வருவதாக இடதுசாரிகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைய இன்று கூடிய ஐ.மு. - இடது கூட்டணி ஆய்வுக் குழுக் கூட்டம் 2 மணி நேரம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த விவரங்களின் அடிப்படையில் இன்றும் இணக்கமான முறையில் விவாதம் நடந்ததாகவும், அடுத்த சந்திப்பு அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், அப்பொழுது தொடர்ந்து பேசப் போவதாகவும் கூறினார்.
இந்தியாவின் அணு உலைகளை கண்காணிப்பதற்கென தனித்த ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் சாதாரண ஆலோசனை நடைபெற்று வருவதாக தங்களிடம் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக இடதுசாரிகள் கூறினர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இடது கூட்டணியைச் சேர்ந்த ஃபார்வர்ட் பிளாக் தலைவர் தேவ பிரதாப் விஸ்வாஸ், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்றே தங்களுக்குப் படுவதாகக் கூறினார்.
இதற்கிடையே, சர்வதேச அணு சக்தி முகமையுடன் அதிகாரப்பூர்வ பேச்சு எதையும் நடத்தவில்லை என்று இந்திய அணு சக்தித்துறை மும்பையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 05 Oct 2007 (19:56 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (19:56 IST)