Publish Date: Fri, 05 Oct 2007 (13:32 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (13:32 IST)
பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் விலைகளை உயர்த்துவது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பெகுரியா தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சந்தையில் நிலையில்லாமல் உயரும் கச்சா எண்ணெய் விலையினால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு எண்ணை விற்பனையினால் நாள்தோறும் ரூ.92 முதல் 100 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே விலையை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அடுத்தவாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று பெகுரியா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விரைவில் வெளியிடப்பட உள்ள எண்ணைப் பங்குப் பத்திரங்கள் மூலம் ஓரளவு நிதி திரட்டமுடியும். ரூ.25,000 கோடி அளவிற்கு பங்குப்பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.