Publish Date: Fri, 05 Oct 2007 (13:04 IST)
Updated Date: Fri, 05 Oct 2007 (13:03 IST)
ராமர் பற்றி விமர்சனம் செய்ததற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த ஆந்திர நீதிமன்றம் நவம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வால்மீகி மல்லிகார்ஜுனா. இவர் கடந்த 24ஆம் தேதி ஆதோனி நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தெடர்ந்தார்.
அதில், "பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி பேசும்போது, "ராமர் என்ன என்ஜினீயரா? அவர் எந்த கல்லூரியில் படித்தார் என்றும், ராமர் மது அருந்தும் பழக்கமுடையவர்'' என்றெல்லாம் அவதூறாக பேசினார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டது. இதனால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் வால்மீகி மல்லி கார்ஜுனா, பத்திரிகைகளில் வெளியான கருணாநிதியின் ராமர் பற்றிய விமர்சனங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிரண்குமார், "கருணாநிதி மீது 298, 153ஏ, 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். பின்னர் அடுத்த மாதம் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.