Publish Date: Wed, 03 Oct 2007 (10:12 IST)
Updated Date: Wed, 03 Oct 2007 (10:11 IST)
ஒப்பந்த காலம் முடிந்து பதவியை விட்டு முதலமைச்சர் குமாரசாமி விலகாததால் பா.ஜ. மந்திரிகள் 17 பேர் நேற்று பதவி விலகினர். இதனால் கர்நாடக அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் தேவேகவுடா தலைமையிலான ஜனதாதளம் (எஸ்)- பாரதிய ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தேவகவுடாவின் மகன் குமாரசாமி இருந்து வருகிறார்.
முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்வராகவும், அடுத்த 20 மாதங்கள் பா.ஜ.வை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்று இன்றுடன் (3ஆம் தேதி) 20 மாதங்கள் நிறைவடைவதால் அவர் ஆட்சியை பா.ஜ.விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியை ஒப்படைக்க விரும்பவில்லை.
இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. நேற்று மாலைக்குள் குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்க வகை செய்யும் ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை மாநில கவர்னரிடம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ. கெடு விதித்து இருந்தது. இந்த கெடுவை குமாரசாமி நிராகரித்து விட்டார்.
''தான் அவசரப்பட்டு பதவி விலக விரும்பவில்லை'' என்று கூறிய குமாரசாமி, காஷ்மீரில் இதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியை காங்கிரசிடம் ஒப்படைக்க 3 மாதங்கள் தாமதம் ஆனதையும் சுட்டிக் காட்டினார். பா.ஜ.க. மந்திரிகள் பதவி விலகினால் அவர்களை தான் தடுத்து நிறுத்தப் போவது இல்லை என்றும் கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அகில இந்திய பா.ஜ. துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பெங்களூருரில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், பா.ஜ. மந்திரிகள் 17 பேரும் கூண்டோடு பதவி விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, துணை முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ. மந்திரிகள் அனைவரும் முதலமைச்சர் குமாரசாமி வீட்டுக்கு சென்று அவரிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். அவற்றை குமாரசாமி பெற்றுக் கொண்டார்.
பின்னர் வெளியே வந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் அரசியல் விவகார குழு 5ஆம் தேதி கூடி முடிவு எடுக்க இருப்பதாகவும் அன்று நல்ல தீர்வு ஏற்படும் என்றும் எனவே அதுவரை கால அவகாசம் அளிக்குமாறு குமாரசாமி தங்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக, கர்நாடக சட்டசபை கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Webdunia
Publish Date: Wed, 03 Oct 2007 (10:12 IST)
Updated Date: Wed, 03 Oct 2007 (10:11 IST)