Publish Date: Sat, 29 Sep 2007 (15:08 IST)
Updated Date: Sat, 29 Sep 2007 (15:07 IST)
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 1 முதல் 10 ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராஜா கூறினார்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதிலும், பொது விநியோக முறையை ஒழுங்குபடுத்துவதிலும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியடைந்துவிட்டது. பொருள்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் நுகர்வோர் விலை குறியீட்டில் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை என்று ராஜா தெரிவித்துள்ளார்.
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு செய்யப்படுவதை முழுமையாக எதிர்க்கிறோம். இதனால் சில்லறை வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். நாட்டின் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்கி, அதிக அளவு வேளாண்மை உற்பத்தி பொருள்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. அது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாக அமையும் என ராஜா கூறினார்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் அணுசக்தி ஒப்பந்தம், இந்தியாவின் பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் விபரீதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ராஜா கூறினார்.
Webdunia
Publish Date: Sat, 29 Sep 2007 (15:08 IST)
Updated Date: Sat, 29 Sep 2007 (15:07 IST)