Publish Date: Fri, 28 Sep 2007 (20:29 IST)
Updated Date: Fri, 28 Sep 2007 (20:29 IST)
நாட்டை உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அல் உமா இயக்கத் தலைவர் பாஷா உட்பட 41 பேருக்குத் தனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதித்துள்ளது!
குற்றம் நிரூபிக்கப்படாததால் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் அதற்கும் அதிக காலத்திற்கு சிறையில் இருந்துவிட்டதால் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மதானி, அல் உமா இயக்கத் தலைவர் பாஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உட்பட 168 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தனி நீதிமன்றத்தில் நீதிபதி உத்திராபதி முன்பு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பாஷா, அன்சாரி உட்பட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உட்பட 8 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாகக் கூடுதல், கூட்டுச்சதி, கொலை போன்ற குற்றங்கள் நிருபிக்கப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் அல் உமா இயக்கத் தலைவர் பாஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உட்பட 10 பேருக்கு தலா 7ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் 36 பேருக்கு குற்றத்திற்கேற்ற சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் சிறைகளில் இருந்த ஆண்டுகளை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி 41 பேரும் ஏற்கெனவே 8ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துள்ளதால் அனைவரும் விடுதலையாகின்றனர்.
இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கு விவரங்கள் குறித்து வெளியில் பேசக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.