Publish Date: Wed, 26 Sep 2007 (19:32 IST)
Updated Date: Wed, 26 Sep 2007 (19:32 IST)
புதுவையில் செய்முறை தேர்வு நடத்தக் கோரி பாலிடெக்னிக் முதல்வர் அறை முன்பு மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரியில் அமைந்துள்ளது மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக். இந்த பாலிடெக்னிக்கைச் சேர்ந்த ஆசிரியர்கள் சம்பள் உயர்வு, தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் உள்ள மற்ற பாலிடெக்னிக்குகளில் செய்முறை தேர்வு நடந்து முடிந்து விட்டது. ஆனால் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த பாலிடெக்னிக் மாணவிகளுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவில்லை.
கடந்த ஒரு வாரமாக மாணவிகள் தேர்வை நடத்தக் கோரி, வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இனறு மாணவிகள் முதல்வரை சந்தித்து பேச முதல்வரின் அறைக்கு சென்றனர். முதல்வருடன் பேசிக் கொண்டிருந்த போது கைகலப்பு ஏற்பட்டதால், முதல்வர் அறையின் கதவு உடைந்தது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவிகளை போராட்டத்தை திரும்பப் பெறும் படி சமாதானப்படுத்தினார்கள்.
ஆனால் மாணவிகள் முதல்வரின் அறையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.