Publish Date: Wed, 19 Sep 2007 (16:15 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டத்தினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கோ, அயலுறவுக் கொள்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று இடதுசாரிகள் கூறியுள்ளனர்!
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஐ.மு. - இடதுசாரிகள் கொண்ட சிறப்புக் குழு இன்று மாலை 2வது முறையாக கூடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று இடதுசாரிகள் கூட்டணியைச் சேர்ந்த 4 கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், ஹென்ரி ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் ஆகியவற்றில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொண்டுள்ள நிலைப்பாட்டை எங்களால் ஏற்க முடியவில்லை என்று கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினால் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படும் உபகரணங்கள், தொழில்நுட்பம் மட்டுமின்றி, அதனால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஆகும் செலவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியன குறித்தும் தங்களுக்கும், ஆளும் கூட்டணிக்கும் இடையே பெரும் வித்தியாசம் உள்ளதாக பரதன் கூறினார்.
அமெரிக்காவிடம் இருந்து பெறக்கூடிய தொழில்நுட்ப உதவியால் தயாரிக்கப்படும் மின்சாரம் ஏற்கனவே உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் தயாரிப்பதை விட குறைந்து செலவில் இருக்குமா அல்லது அதிகமாகுமா என்பதும் ஆராயப்படக்கூடிய ஒன்றே என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலர் ராஜா கூறியுள்ளார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீதாராம் யச்சூரி, புரட்சி சோசலிஸ்ட் தலைவர் அபனி ராய், ஃபார்வர்ட் பிளாக் பொதுச் செயலர் பிஷ்வாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Webdunia
Publish Date: Wed, 19 Sep 2007 (16:15 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)