Publish Date: Thu, 13 Sep 2007 (17:23 IST)
Updated Date: Thu, 13 Sep 2007 (17:23 IST)
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை அளித்த விளக்கம் சர்ச்சையாகிவிட்டதை அடுத்து அதுகுறித்த்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்!
சேது சமுத்திர திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள நிலத் திட்டுத் தொடர்கள் ராமர் பாலம்தான் என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று கூறியது மட்டுமின்றி, ராமர் வாழ்ந்ததற்கோ அல்லது ராமாயணம் நடந்ததாகக் கூறப்படுவதற்கோ ஆதாரம் ஏதும் இல்லை என்றும் தங்களது மனுவில் இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது.
தொல்லியல் துறையின் இந்த விளக்கத்திற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, ராமர் பாலத்தை பெரும் பிரச்சனையாக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், தொல்லியல் துறை இப்படிப்பட்ட விளக்கத்தை தந்தது குறித்து மத்திய அரசிடம் சோனியா காந்தி விளக்கம் கேட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி கூறியுள்ளார்.
இந்திய தொல்லியல் துறையின் விளக்கம் குறித்து சோனியா காந்தி கவலை தெரிவித்ததாகவும், அந்த விளக்கம் மதவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழியேற்பட்டுள்ளதாகவும் கருதுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Thu, 13 Sep 2007 (17:23 IST)
Updated Date: Thu, 13 Sep 2007 (17:23 IST)