Publish Date: Mon, 10 Sep 2007 (16:35 IST)
Updated Date: Mon, 10 Sep 2007 (16:34 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஆளும் ஐ.மு. கூட்டணி - இடது கூட்டணி கட்சிகளைக் கொண்ட குழு நாளை முதல் முறையாக சந்திக்கிறது!
இத்தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்ட அக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் சீதாரம் யச்சூரி, அக்கூட்டுக் குழு எவ்வாறு இயங்கும் என்பதனை நாளைய சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
நாளை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் மாலை 4.15 மணிக்கு 15 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் கூட்டம் நடைபெறும் என்று யச்சூரி கூறினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கும், கவலைகளுக்கும் எப்படி இக்குழு தீர்வு காண்பது என்பது குறித்து விவாதிக்கப்படு என்றார்.
ஆளும் கூட்டணி, இடது கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு எந்த விதத்திலும் கண்துடைப்பு அல்ல. இடதுசாரிகள் தெரிவித்து வரும் சந்தேகங்களையும், கவலைகளையும் அரசு மதிக்க வேண்டும். ஏனெனில் இடதுகளின் ஆதரவுடனேயே அரசு செயல்பட்டு வருகிறது என்று இடது கூட்டணி தலைவர்களான பாசுதேவ் ஆச்சாரியாவும், ரூப்சந்த் பாலும் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து ஆராய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்துவது குறித்து கேட்டதற்கு, இது அரசிற்கும், அரசை ஆதரிக்கும் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சனை. இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுவதே இலக்கு என்று கூறினார்.