Publish Date: Mon, 10 Sep 2007 (11:23 IST)
Updated Date: Mon, 10 Sep 2007 (11:22 IST)
ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா சந்திப்பில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 20 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான பஞ்சகுட்டா சந்திப்பு சாலையில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
நேற்று மாலை திடீரென மழை பெய்யத் துவங்கியது. பலத்த மழை பெய்ததால் சாலையில் சென்றவர்களும், கார்களில் வந்திருந்தவர்களும் பாலத்தின் கீழ் ஒதுங்கினர். பல கார்கள் பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் ஒரு பகுதி 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. கட்டட இடிபாட்டில் மழைக்காக ஒதுங்கிய மக்கள் சிக்கிக் கொண்டனர். 25க்கும் மேற்பட்ட கார்களும் நொறுங்கியது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழை பெய்து கொண்டிருந்ததாலும், கான்கிரீட் பாலம் என்பதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.