Publish Date: Sat, 01 Sep 2007 (20:48 IST)
Updated Date: Sat, 01 Sep 2007 (20:47 IST)
தேவையற்ற, வணிக ரீதியான தொலைபேசி அழைப்புகள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கூறியுள்ளது!
தேச தேவையற்ற அழைப்புகள் பதிவு (National Do Not Call Registry - NDNCR) என்ற பிரிவில் தங்கள் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்டபிறகு, தேவையில்லாத அழைப்புகள் வருவது நிறுத்தப்படும் என்று டிராய் கூறியுள்ளது.
வாடிக்கையாளர் பதிவு செய்துகொண்ட 48 மணி நேரத்தில் பதிவு செய்துகொண்டதற்கான குறிப்பு எண் வழங்கப்படும் என்று கூறியுள்ள டிராய், பதிவு செய்யப்பட்டதிலிருந்து 45 நாட்களுக்குப் பிறகு வாடிக்கையாளருக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
அதன்பிறகும் வணிக ரீதியான தொலைபேசி அழைப்புகள் வாடிக்கையாளர் தனக்கு வந்ததாக புகார் தெரிவித்தால், வாடிக்கையாளருக்கு வந்த அழைப்பு எண், டிராயில் பதிவு செய்யப்பட்டுள்ள டெலிமார்கெட்டிங் நிறுவனங்களினுடைய பட்டியல் எண்ணில் இருந்தால், அழைப்பு மேற்கொண்ட அந்த நிறுவனம், வாடிக்கையாளருக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.500 அபாரதமாக செலுத்த வேண்டும் என்று டிராய் கூறியுள்ளது.
டிராயில் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டிங் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தால், அந்த தொலைபேசி எண் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று டிராய் கூறியுள்ளது.