Publish Date: Thu, 30 Aug 2007 (18:08 IST)
Updated Date: Thu, 30 Aug 2007 (18:08 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண தனி குழு ஒன்றை அமைப்பது என்ற ஆளும் கூட்டணியின் பரிந்துரையை இடதுசாரிகள் ஏற்றுள்ளனர்!
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல் ஆகியோருடன இடதுசாரி தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் யச்சூரி, ஏ.பி. பரதன், ராஜா, தேவபிரதாப் பிஷ்வாஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் இக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
30 நிமிட நேரம் நடந்த இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை வாசித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம், அணுத் துறையில் தன்னிறைவு, அணு சக்தி ஒப்பந்தத்தால் அயலுறவு மற்றும் தேச பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் தாங்கள் ஆகியன குறித்து இக்குழு விரிவாக ஆராயும் என்று கூறினார்.
இக்குழு அளிக்கும் பரிந்துரைகள் அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கப்படும் என்று கூறிய பிரணாப் முகர்ஜியிடம், இக்குழுவின் பரிந்துரை கிடைக்கும் வரை அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்காதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பிரணாப் முகர்ஜி பதிலளிக்கவில்லை.
எனவே, அரசியல் குழு ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் வரை அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தற்காலிகமாக கிடப்பில் போடப்படலாம் என்று கருதப்படுகிறது.
Webdunia
Publish Date: Thu, 30 Aug 2007 (18:08 IST)
Updated Date: Thu, 30 Aug 2007 (18:08 IST)