Publish Date: Thu, 30 Aug 2007 (13:33 IST)
Updated Date: Thu, 30 Aug 2007 (13:33 IST)
நமது நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தப்படலாம் என்று அணு சக்தி சட்டத்தில் திருத்தம் செய்து, அதன் அடிப்படையில் 123 ஒப்பந்தத்தின் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளார்!
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய அத்வானி, 1962ல் கொண்டுவரப்பட்ட இந்திய அணு சக்தி சட்டத்தில், அணு ஆயுதச் சோதனை நடத்தும் உரிமையை சேர்ப்பதன் மூலம் நமது ராணுவ ரீதியிலான அணு சக்தி திட்டத்தை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டத்தினால் உருவாகியுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டே இந்த ஆலோசனையை தான் தெரிவித்துள்ளதாக அத்வானி கூறினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்ப்நதத்திற்கு எதிராக பா.ஜ.க. தெரிவித்து வரும் கருத்துக்கள் அனைத்தும், தேச நலனை அடிப்படையாகக் கொண்டதே தவிர, அது அமெரிக்க எதிர்ப்பு கொள்கை கொண்டது அல்ல என்று கூறிய அத்வானி, அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக தான் தெரிவித்துள்ள கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணானது என்று கூறப்படுவதை மறுத்தார்.
தனது கருத்துக்களும், அறிக்கைகளும் பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக்கூடியவையே என்று அத்வானி கூறினார்.
Webdunia
Publish Date: Thu, 30 Aug 2007 (13:33 IST)
Updated Date: Thu, 30 Aug 2007 (13:33 IST)