Publish Date: Thu, 23 Aug 2007 (20:07 IST)
Updated Date: Thu, 23 Aug 2007 (20:03 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த பிரச்சனையில் இடதுசாரிகளின் எதிர்ப்பை நிராகரித்து அதன் காரணமாக மத்திய அரசு கவிழ்ந்தால் அதற்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே போறுப்பேற்கவேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது!
டெல்லியில் நேற்றும், இன்றும் நடந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காமல் நிறுத்திவைக்க வேண்டும் என்றும், அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் விளைவுகள் குறித்து தாங்களும், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துவரும் ஆட்சேபணைகள் பற்றி ஆராய வேண்டும் என்றும்தான் தாங்கள் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுவரும் கவலைகள் குறித்து ஆராய மத்திய அரசு எந்தக் குழு அமைத்தாலும் அதனைத் தாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரகாஷ் காரத் கூறினார்.
ஆனால் இதையும் மீறி அணு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை மேற்கொண்டு அதன் காரணமாக மத்திய அரசு கவிழ்ந்தால் அதற்கு ஆளும் கூட்டணியே பொறுப்பு என்று காரத் கூறினார்.
அமெரிக்காவுடனான உறவால் நமது மக்களின் வாழ்க்கையும், பொருளாதார சுதந்திரமும், அயலுறவுக் கொள்கையை தனித்தன்மையுடன் நிர்ணயித்துக் கொள்ளும் இறையாண்மையும் பறிபோய்விடும் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லப்போவதாக காரத் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 23 Aug 2007 (20:07 IST)
Updated Date: Thu, 23 Aug 2007 (20:03 IST)