Publish Date: Tue, 07 Aug 2007 (19:28 IST)
Updated Date: Tue, 07 Aug 2007 (19:28 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதிபடுத்தும் 123 ஒப்பந்த வரைவின் மீதான விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும் என்று அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்!
வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, 123 ஒப்பந்தத்தின் மீதான அரசின் நிலையை அறிக்கை தெளிவுபடுத்தும் என்றும், ஆனால் அதன் மீதான விவாதம் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அயல்நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பிறகே நடைபெறும் என்று கூறினார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீது அவை நடவடிக்கை விதி 184ன் கீழ் விவாதத்தை நடத்த வேண்டும் என்று கோரி எந்தத் தாக்கீதும் அரசிற்கு வரவில்லை என்று கூறிய தாஸ் முன்ஷி, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான கூட்டறிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்டதை மீறி எந்த மாற்றமும் 123 ஒப்பந்தத்தில் செய்யப்படவில்லை என்று பிரதமர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்று கூறினார்.
இதற்குமேலும் அரசு அறிக்கையின் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தால், அது குறித்து அவைத் தலைவர் முடிவெடுப்பார் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.