Newsworld News National 0707 29 1070729010_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

123 ஒப்பந்தம் எதிர்பார்த்ததைவிட சாதகமானதே : நாராயணன்!

Advertiesment
123 ஒப்பந்தம் இந்தியா அமெரிக்கா எம்.கே. நாராயணன்

Webdunia

, ஞாயிறு, 29 ஜூலை 2007 (21:28 IST)
இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சாதகமாகவே உள்ளது என்று தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்!

நிக்கோலாஸ் பர்ன்ஸ் தலைமையிலான அமெரிக்க அயலுறவு அமைச்சகக் குழுவினருடன் தனது தலைமையிலான இந்தியக் குழு வாஷிங்டனில் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இறுதி செய்யப்பட்ட 123 ஒப்பந்தம், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றியுள்ளது என்று இந்தியா டுநைட் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நாராயணன் கூறியுள்ளார்.

"இந்தியா - அமெரிக்கா இடையே சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது, அணு உலைகள், பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுஆக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அணு தொழில்நுட்பத்தில் முன்னேறிய நிலையில் உள்ள இரு நாடுகளுக்கு இடையிலான சம பலனையும், சாதகத்தன்மையும் அளிக்கக்கூடிய ஒன்று என்கின்ற உறுதிமொழியைப் பெற்றுள்ளோம்" என்று நாராயணன் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் நல்லது அல்லது மிகச் சிறந்தது என்று இந்தியாவின் நோக்கில் கூறலாம் என்று கூறிய நாராயணன், இதனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும், நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சாதகமாகவே அமைந்துள்ளதாகத் தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

தன்னைப் பொறுத்தவரை 123 ஒப்பந்தம் நல்லது என்பதற்கும், சிறந்தது என்பதற்கும் இடைப்பட்டதெனக் கருதுவதாகக் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இன்னும் சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ அணு சக்தி ஒத்துழைப்பு நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாராயணன் கூறினார். (பி.டி.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil