Publish Date: Tue, 24 Jul 2007 (13:10 IST)
Updated Date: Tue, 24 Jul 2007 (13:09 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் நிறுத்தப்பட்டுள்ள படைகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றி நிறுத்துவது குறித்து ஆராய பிரதமர் அமைத்த குழு இன்று கூடுகிறது.
பாதுகாப்பு அமைச்சகச் செயலர் சேகர் தத் தலைமையிலான இக்குழு, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் தோட்டங்களிலும், நிலங்களிலும் முகாமிட்டுள்ள படைகளை அங்கிருந்து விலக்கிக் கொள்வது குறித்தும் ஆராயும்.
தனியார் இடங்களில் முகாமிட்டுள்ள படைகள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். அல்லது அங்கு இருப்பதற்காக குத்தகை நிலவுடைமையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் கருத்து குறித்தும் இக்குழு ஆலோசிக்கும்.
இம்மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற உள்ள சேகர் தத் அதற்கு முன்னதாக தனது குழுவின் பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படை நிலைகள் மாற்றம் மட்டுமின்றி, பொதுமக்களிடம் படையினரின் நடத்தை மாற வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் சேகர் தத் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏ.என்.ஐ.)
Webdunia
Publish Date: Tue, 24 Jul 2007 (13:10 IST)
Updated Date: Tue, 24 Jul 2007 (13:09 IST)