Publish Date: Mon, 23 Jul 2007 (18:27 IST)
Updated Date: Mon, 23 Jul 2007 (18:27 IST)
ஊழியர் நல நிதிக்கு 2006-07 நிதியாண்டிற்கும் 8.5 விழுக்காடு வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது!
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று நடந்த ஊழியர் நல நிதி வாரியக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்களின் வற்புறுத்தலால் 8.5 விழுக்காடு வட்டியை அளிக்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
8.5 விழுக்காடு வட்டி அளிப்பதால் ஊழியல் சேம நல நிதியத்திற்கு கூடுதலாக ரூ.450 கோடி சுமை ஏற்படும் என்றும், ஆனால் அதன் அவசர மற்றும் சிறப்பு கூடுதல் நிதியில் உள்ள ரூ.590 கோடி உபரியைக் கொண்டு இதனை சமாளிக்க முடியும் என்று தொழிலாளர் நல நிதி வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொழிலாளர் நல நிதி வாரியத்தின் இம்முடிவு நிதியமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். அதன் அடிப்படையில் மத்திய அரசு இது குறித்த அறிவிக்கையை வெளியிடும்.
நாடு முழுவதும் 4 கோடி ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நல நிதியத்தின் தொகுப்பில் ஓய்வு ஊதியம் உட்பட ரூ.94,000 கோடி இருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (பி.டி.ஐ.)
Webdunia
Publish Date: Mon, 23 Jul 2007 (18:27 IST)
Updated Date: Mon, 23 Jul 2007 (18:27 IST)