Publish Date: Fri, 20 Jul 2007 (21:33 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:02 IST)
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இடது சாரிகள் பரிந்துரை செய்த ஹமீத் அன்சாரியை வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார்.
இந்திய அரசுப் பணியில் அனுபவம் பெற்றவரான ஹமீத் அன்சாரி, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளவர். ஹமீத் அன்சாரியை தங்களது முதல் தேர்வாக பரிந்துரைத்துள்ளதாக இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேற்று இரவு சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், நாடாளுமன்ற கட்சித் தலைவர் சீதாரம் யச்சூரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்பொழுது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஹமீத் அன்சாரியை முன்மொழிந்தனர். தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஹமீத் அன்சாரியின் பெயரை இடதுசாரிகள் முன்மொழிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரி போட்டியிடுவார் என தெரிவித்தார்.