உலக வெப்பமயமாதலால் சென்னை மற்றும் மும்பை நகரங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய தேச மக்கள் தொகை அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பனிக்கட்டிகள் உருகி கடலின் மட்டம் உயரும். கடல் மட்டம் உயருவதால் கடல் எல்லைகள் நீளும். கடற்பகுதிகள் நீண்டால், கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் நிலை உண்டாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
கடல் மட்டம் அதிகரிப்பதால் நிலத்தடி நீரின் குணமும் மாறிவிடும். நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்.
இந்த பிரச்சினைகளினால் ஏற்கனவே கடும் அவதிக்குள் வாழும் கிராம மக்கள்தான் பெரும் பாதிப்பை அடைவார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.
கடல் பகுதி நகரங்களுக்கு இந்த நிலை என்றால், டெல்லி போன்ற கடலில் இருந்து அதிக தூரத்தில் உள்ள நகரங்களுக்கு இன்னும் ஒரு படி மேலே போய் கடும் வறட்சியும், அதிக வெப்பநிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும்.