Publish Date: Wed, 04 Jul 2007 (20:44 IST)
Updated Date: Wed, 04 Jul 2007 (20:44 IST)
குஜராத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பதான் பகுதியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 380 மி.மீ. மழை பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன மழைக்கு இதுவரை 98 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அவசரமாக இன்று அகமதாபாத் திரும்பினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், பின்னர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.