Publish Date: Tue, 03 Jul 2007 (11:44 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (11:44 IST)
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரதீபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், பிரதீபாவிற்கு பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், பிரதீபா பாட்டீல் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால். அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என டில்லியை சேர்ந்த சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது. பிரதீபா பாட்டீல் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிருபிக்க போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.