Publish Date: Fri, 22 Jun 2007 (11:01 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (18:56 IST)
மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலை ஒத்திவைத்தால் முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு வரும் 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறயுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுரை தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்தன. இதனால் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைத்தால் முதலமைச்சர் கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றிரவு அவர் டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலை பாரபட்சமின்றி நேர்மையாக நடத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுள்ளதாகவும், தேர்தல் திட்டமிட்ட தேதியில் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்குமானால், அதை எதிர்த்து டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாகவும் பழனி மாணிக்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.