Publish Date: Mon, 18 Jun 2007 (14:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (18:53 IST)
சிக்குன்குனியா நோய் கேரளாவில் வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு அனுப்பப்பட்ட உயர்மட்டக் குழுவினர் நடத்திய ஆய்வில், சிக்குன்குனியா பாதித்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
கேரளாவில் சிக்குன்குனியாவின் தாக்கம் உள்ளது. ஆனால் சிக்குன்குனியா நோய் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.
மற்ற நோய் தாக்குதல் மற்றும் இயற்கை மரணமடைந்த 60 பேரும் சிக்குன்குனியாவால் இறந்ததாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்ற அன்புமணி, மற்ற நோய் தாக்குதல் என்றால் எந்த நோய் என்று விளக்கமளிக்க தவறிவிட்டார்.
கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கோவாவிலும் சிக்குன்குனியா நோயின் தாக்கம் உள்ளது என்றும், குறிப்பாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் சிக்குன்குனியா நோய் பரவியுள்ளது என்றும் அவர் கூறினார்.
சிக்குன்குனியா நோய் தாக்கிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், கொசு ஒழிப்பு மற்றும் நோய் பரவல் தடுப்பு வழிமுறைகள் ஆராயப்படும். மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பஞ்சாயத்துப் பகுதிகள் தலா ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அன்புமணி கூறினார்.
கேரளாவில் வேறு ஒரு வைரல் காய்ச்சல் பரவி இருப்பதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட 15,000 பேர் இன்னும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக பத்தனம்திட்டாவில் 4,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 18 Jun 2007 (14:50 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (18:53 IST)