Publish Date: Thu, 14 Jun 2007 (13:17 IST)
Updated Date: Thu, 14 Jun 2007 (13:16 IST)
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து முதலமைச்சர் கருணாநிதி, இடது சாரி கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார்.அங்கு அவர், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் நேற்றிரவு சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், டெல்லி தமிழ் நாடு இல்லத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.பி.பரதனும், டி.ராஜாவும் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி.பரதன், குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து தங்களின் நிலைப்பாடை கருணாநிதியிடம் தெரிவித்திருப்பதாகவும், இன்று மாலை மீண்டும் அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சார்பில் 3 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளித்த பரதன், அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.