மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் தகவல்
, செவ்வாய், 18 மார்ச் 2014 (12:56 IST)
கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
239
பயணிகளுடன் மாயமான MH 370 விமானத்தை 20 க்கும் மேற்பட்ட நாடுகள், 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் முழுமூச்சாக தேடிவந்தன. நடுவானில் இந்த விமானம் மாயமாகி 10 நாட்கள் ஆகியுள்ள நலையில் விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் என்ன ஆனது என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்நிலையில், இந்த விமானம் வேண்டுமென்றே திசை திருப்பபட்டதாகவும், இந்த விமானம் மாயமானதில், அதீத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமானம் ரேடார் கண்காணிப்பை தவிர்க்க தாழ்வாக பறந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.நா.வின் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் ஆதரவோடு இயங்கும் CTBTO கண்காணிப்பு அமைப்பு மாயமான விமானம் மோதியோ அல்லது வானில் வெடித்து சிதறியோ விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.