லாகூர் : மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஜமாத் - உத் - தவா இயக்கத்தின் தலைவர் ஹாஃபிஷ் முகமத் சயீத் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் நஸீர் அகமத் ஆகியோரை லாகூர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாற்றப்பட்ட லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தின் துணை அமைப்புதான் ஜமாத் - உத் - தவா என்று புகார் எழுந்தது.இதனையடுத்து அந்த இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்த பாகிஸ்தான் அரசு, அந்த அமைப்பின் தலைவரான முகமத் சையீத் மற்றும் அவரது உதவியாளர் நஸீர் அகமத் ஆகியோரை வீடுக்காவலில் சிறை வைத்தது.
இந்நிலையில், தங்களை வீட்டுக்காவலில் சிறை வைத்தது சட்டவிரோதம் என்றும், எனவே தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மேற்கூறிய இருவர் தரப்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே. தோகாரின் வாததை ஏற்று, முகமத் சையீத் மற்றும் நஸீர் ஆகியோரை வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.