வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறும் கொடை நாடுகள், இப்படிப்பட்ட முயற்சியின் மூலம் தமிழர்களை இன ரீதியாக ஒழித்துவரும் சிங்கள இன வெறி அரசை அதன் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றவே முற்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் கூறியுள்ளார்.
சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் மறுசீரமைப்பிற்கு உதவ முன்வந்த கொடை நாடுகள் (Donor Nations) அமைப்பில் நார்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. தற்பொழுது வன்னியில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு சிக்கியுள்ள மக்களைக் காக்க, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு சிறிலங்க அரசு அளிக்க முன்வந்துள்ள பொது மன்னிப்பை ஏற்க வேண்டும் என்றும், அதன்பிறகு, தமிழர்களின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்வைப் பெற்றுத்தர தாங்கள் உதவுவதாகவும் கூறியுள்ளது.
கொடை நாடுகளின் இந்த அணுகுமுறை, தவறான அடிப்படையில் உள்ளதெனவும், அது தமிழர்களுக்கு நன்மை பயப்பதை விட அவர்களின் அழிவிற்கே வழிவகுக்கும் என்று சிறிலங்க நாடாளுமன்றத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினரான எஸ். கஜேந்திரன் கூறியுள்ளார்.
தமிழர்களை அழிக்கும் இன வெறி சிறிலங்க அரசு, இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளுக்காகவும், மனித உரிமைகள் மீறலாலும் சர்வதேச கண்டனத்திற்கு ஆளாகி, அழிந்துபோகும் நிலையில், அதனை காப்பாற்றும் கடைசி முயற்சியாகவே கொடை நாடுகளின் வேண்டுகோள் உள்ளது என்று குற்றம் சாற்றியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை, ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றி, ஒரு கண்ணியமான தீர்வைத் தரவேண்டும் என்று கொடை நாடுகள் முயற்சித்திருந்தால் அவற்றின் அணுகுமுறை இப்படிப்பட்டதாக இருந்திருக்காது என்று கஜேந்திரன் கூறியுள்ளார்.
தமிழர்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க மறுத்து வருகிறார்கள் என்ற விஷமத்தனமான ஒரு கோணத்திலிருந்தே கொடை நாடுகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. உண்மையில், புலிகளின் பாதுகாப்பில் இருந்து வெளியேறினால் அது தங்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதனால்தான் அம்மக்கள் அவர்களுடன் உள்ளனர் என்பதே நிதர்சனமாகும். எனவே அவர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் எவ்வித நிபந்தனையும் அற்ற போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தமிழர்களின் நிலப்பகுதிகளில் தங்களுக்கு இருந்த கட்டுப்பாட்டை புலிகள் இழந்து வருகிறார்கள் என்றும், சிறிலங்க அரசிற்கு எதிரான போர் முடிந்துவிட்டது என்றும், தமிழர்கள் தங்கள் தேச விடுதலைப் போராட்டத்தை கைவிட்டு விட்டார்கள் என்ற ஒரு தவறான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே கொடை நாடுகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மூன்றாவதாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுமாறும், சிங்கள இனவெறி அரசின் பொது மன்னிப்பை ஏற்குமாறும் கூறியிருப்பது, கொடை நாடுகள் சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் குரலாக மாறிவிட்டதையே காட்டுகிறது. தங்களுடைய தேசிய விடுதலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பதையும், ஈழத்திலும், உலகெங்கிலும் வாழும் ஈழ மக்களிடையேயும் அவர்களுக்குள்ள ஆதரவையும் அறிந்திருந்தும், கொடை நாடுகள் இப்படிப்பட்ட கோரிக்கையை வைத்திருப்பது, அதன் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகத்தையே எழுப்புகிறது.
நான்காவதாக, ஈழத் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை எப்போதும் போல இப்போதும் மேம்போக்காக பார்க்கிறது கொடை நாடு அமைப்பு. இப்பொழுதுள்ள சிறிலங்க அரசமைப்பிற்கு உட்பட்டு எந்தத் தீர்வும் சாத்தியமில்லை என்று தெரிந்தும், போரினால் அல்ல, பேச்சுவார்த்தையின் மூலம்தான் அரசியல் தீர்வு காண முடியும் என்று இதுவரை கூறிவந்ததற்கு மாறாக, சிறிலங்க அரசு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாகவே இந்தக் கோரிக்கை உள்ளது. சுறுங்கக் கூறுவது எனில், கொடை நாடுகளின் கோரிக்கை தமிழர்கள் அடிமையாக வேண்டும் என்று கோரியுள்ளது.
ஐந்தாவதாக, மனித உரிமைகளை கடைபிடிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களையெல்லாம் சிறிலங்க அரசு இதுநாள் வரை புறக்கணித்து வந்துள்ளது என்பதை அறிந்தும், தங்கள் வாழ்விடங்களை விட்டு துரத்தப்பட்டு கூடாரங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கொடை நாடுகள் கூறியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை, தமிழர்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் வாழவேண்டுமெனில், அது தமிழர் ஆட்சியில் மட்டுமே சாத்தியமாகும்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தனது இராணுவத்தையும், விமானப் படையையும் ஏவி இரத்த வெறியுடன் நடத்திவரும் தாக்குதலையும், மனித உரிமைகள் எதற்கும் மரியாதை அளிக்காத போக்கையும் சர்வதேச சமூகம் முழுமையாக அறிந்துள்ள நிலையில், அதனைக் கண்டிக்காமல், தமிழர்களை இனப் படுகொலைக்கு உள்ளாக்கிவரும் அந்த அரசிடமே மன்னிப்பு பெற்று, மண்டியிடச் சொல்வது மனித நாகரீகத்தை கேலிக் கூத்தாக்குவதாகும்.
இதில் மிகவும் வருதத்திற்குரிய விடயம், கொடை நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நார்வே நாடு இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருப்பதுதான். தமிழர்கள் சுய உரிமை பெற்று வாழ வழிசெய்ய நடுநிலையுடன் அனுசரணையாளராக பணியாற்றிய நார்வே நாடு, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சீர்குலைத்த, அவர்களை இன அழிப்பு செய்துவரும் சிறிலங்க அரசிடமே பாதுகாப்புக் கோரும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளது வேதனையானதாகும் என்று கஜேந்திரன் கூறியுள்ளார்.