இலங்கையின் வன்னியில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனங்களைப் பயன்படுத்தி 2 கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்தியில், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று (செவ்வாய்) வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் மூலம் 2 கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலின் போது லெப்.கர்ணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா மற்றும் மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என புதினம் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி தெரிவிக்கிறது.