Publish Date: Tue, 03 Feb 2009 (16:30 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (16:27 IST)
கென்யாவில் சாலை விபத்தில் கவிழ்ந்த கச்சா எண்ணெய் லாரியில் இருந்து எண்ணெய் சேகரிக்க முயன்றபோது ஏற்பட்ட தீயில் சிக்கி 111பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கென்யாவில் ரிப்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று மோலோ என்ற நகருக்கு அருகில் திடீரென்று கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியது.
இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் வசித்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கேன்களை எடுத்துக்கொண்டு ஓடி எண்ணெயைச் சேகரிக்க முயன்றனர். காவலர்களின் அறிவுரையையும் மீறி அம்மக்கள் எண்ணெயைச் சேகரித்து கேன்களில் ஊற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கச்சா எண்ணெயில் திடீரென்று தீ பிடித்துக்கொண்டது. பயங்கரமாக பிடித்து எரிந்த தீயில் எண்ணெய் சேகரித்தவர்கள் அனைவரும் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.