Publish Date: Tue, 27 Jan 2009 (18:24 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (18:23 IST)
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகாக பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவித் தொகையில் 5.5 கோடி டாலரை அமெரிக்கா குறைத்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக். பிரதமரின் நிதி ஆலோசகர் சௌகத் தாரின், கடந்த ஏப்ரல் 2008 முதல் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு 10.1 கோடி டாலரை அமெரிக்கா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு நிதியாக அமெரிக்காவிடம் 15.6 கோடி டாலரை பாகிஸ்தான் கோரி இருந்தது. ஆனால் அதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த அமெரிக்க தணிக்கையாளர்கள் சில சந்தேகஙகள் எழுப்பியதாலும், புதிய அமெரிக்க அரசின் நிதிக் கொள்கைகளாலும், பாகிஸ்தான் கோரிய நிதி முழுவதுமாக அளிக்கப்படவில்லை என சௌகத் தாரின் குறிப்பிட்டார்.
எனினும், பயங்கரவாததிற்கு எதிராக செலவழிக்கப்பட்ட தொகையை முழுவதுமாகப் பெறும் நோக்கில் இதுதொடர்பான கணக்கு வழக்குகளை மீண்டும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தாக்கல் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பாகிஸ்தானின் ராணுவச் செலவுகள் அதிகரித்தை ஒப்புக்கொண்ட சௌகத் தாரின், இதன் காரணமாக நாட்டின் நிதி நிலைமையில் சிறிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.