Publish Date: Sun, 25 Jan 2009 (14:48 IST)
Updated Date: Sun, 25 Jan 2009 (14:47 IST)
இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டு வருவதாகவும், பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு உத்தரவிடக் கோரி இலங்கை அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நியூயார்க்கில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பத்திரிக்கையாளர்கள் மீது அரசியல் காழ்ப்புணரச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசைநாயாகம், வெளியீட்டாளர் என். ஜஷிஹரன் மற்றும் அவரது மனைவி வி. வளமதி ஆகியோர் மீது பொய் வழக்குகள் பதிவாகியிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"திசைநாயகத்தின் கைது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றுள்ளது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கா கொலை செய்யப்பட்டதும், கொழும்புவில் உள்ள மஹாராஜா தொலைக்காட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதும் அதற்கு சரியான முன்னுதாரணங்களாக உள்ளன.