சிறிலங்க அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்க அரசு நேற்று அறிவித்த புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள, வள்ளிபுனம் பள்ளியில் இயங்கும் முல்லைத்தீவு பொது மருத்துவமனையைக் குறிவைத்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12:30 மணிக்கு சிறிலங்க படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியவை உள்ளிட்ட முக்கியக் கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்தன என்று தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
இத்தாக்குதலில் மருத்துவமனை வளாகத்திற்குள் எறிகணைகள் விழுந்து வெடித்ததால் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர் என்று மண்டல மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் டி. வரதராஜா தெரிவித்தார் என்றும் தமிழ்நெட் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலால் மருத்துவமனைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் மருத்துவர் வரதராஜா கூறியுள்ளார்.