Publish Date: Wed, 21 Jan 2009 (11:03 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (11:02 IST)
உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை அமெரிக்காவுடன் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து சமாளிக்கவும், தலைமை தாங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பராக் ஹுஸைன் ஒபாமா கூறியுள்ளார்.
இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் அமெரிக்காவின் 44வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொண்ட ஒபாமா, விழாவைக் காண வந்திருந்த 20 லட்சம் மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரையில், கிறிஸ்தவர், முஸ்லிம், யூதர், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இவற்றில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.
நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.
தலைமை தாங்கத் தயார்: உலகம் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் நம்மோடு ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார். பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சமாட்டோம்.
பெரிய நகரங்களிலிருந்து சிறிய ஊர்கள் வரை, உலகின் எல்லாப் பகுதியிலிருந்தும் இந்தப் பதவியேற்பு விழாவைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் அரசுகளுக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒவ்வொரு ஆடவருக்கும் மகளிருக்கும் குழந்தைக்கும் நாட்டுக்கும் அமெரிக்கா நல்ல நண்பனாக இருக்கும். இதற்காக உலக அரங்கில் அனைத்து நாடுகளுக்கும் தலைமைப் பொறுப்பு ஏற்க அமெரிக்கா தயாராக உள்ளது.
இராக்கிலிருந்து பொறுப்பான வகையில் நாம் வெளியேறுவோம், ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலைபெறச் செய்வோம். நம்முடைய பழைய நண்பர்கள், முன்னாள் எதிரிகள் துணையோடு அணு ஆயுத ஆபத்துகளைக் குறைக்க இடைவிடாமல் பாடுபடுவோம் என்றார் ஒபாமா.
Webdunia
Publish Date: Wed, 21 Jan 2009 (11:03 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (11:02 IST)