Publish Date: Fri, 16 Jan 2009 (10:53 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்தது. அதில் இருந்து ஊழியர்கள் உட்பட 155 பேரும் மீட்கப்பட்டனர்.
ஏர்பஸ்-320 வகையைச் சேர்ந்த அந்த விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திற்கெல்லாம், விமானத்தின் பக்கவாசல் வழியாக பயணிகள் அனைவரும் வெளியேறினர். வேறுசில பயணிகள் தண்ணீரில் மிதந்து கரையேறியதாகவும், விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் வடக்கு கரோலினாவில் சார்லோட் என்ற இடத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாகவும் விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமானத்தில் 150 பயணிகளும், 5 ஊழியர்களும் இருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் விமான நிறுவன மீட்புக் குழுவினர் உதவுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விமானத்தை ஓட்டிய விமானி, பழுதானதை அறிந்து ஆற்றில் தரையிறக்கியதால், அனைவரும் பிழைத்தனர்.
என்றாலும் விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாகத் தெரிய வரவில்லை.