Publish Date: Sat, 10 Jan 2009 (19:52 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:38 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுவிஸ் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் 43,000 ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவிஸ் தமிழர் பேரவை, ஈழத் தமிழர் நலன் கருதி தாங்கள் மேற்கொண்டு வரும் தன்னலமற்ற பணிகளைப் பாராட்டுகிறது.
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திய மண்ணில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது ஆபத்தானது எனத் தெரிந்து கொண்டும், விளைவைப் பற்றி கவலைப்படாது தொப்புள் கொடி உறவுகளுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பது மெய் சிலிர்க்கச் செய்கிறது.
தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவன் என் சகோதரனே என்ற உணர்வுடன் நீங்கள் ஆற்றுகின்ற பணி ஈழத் தமிழர்களால் என்றும் மறக்கப்பட முடியாதது.
தமிழன் வாழாத நாடு இல்லை, ஆனாலும் தமிழருக்கு என்றொரு நாடு இல்லை என்ற இழிசொல்லை மாற்றியமைப்பதற்காக, ஈழத்தில் உரிமை கோரி போராடும் தமிழ் மக்களுக்காக இன்று உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்டி வருகின்றார்கள். அந்த வரிசையில் தங்களின் வரலாற்றுப் பாரத்திரத்தை நன்குணர்ந்து, தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற போரை நிறுத்தி தமிழ் மக்களை இன அழிப்பிலிருந்து காப்பதற்காக தமிழக சட்டசபையில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானமும், அதனைத் தொடர்ந்து புதுடில்லி சென்று பாரதப் பிரதமரை நீங்கள் சந்தித்துக் கோரிக்கை வைத்ததும் ஈழத் தமிழ் மக்கள் மனங்களில் பாலை வார்த்தது.
இவற்றை தொடர்ந்து, காரியங்கள் வேகமாக நடக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பு செல்வார், போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தோம், ஆனால், நாம் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. மாறாக, தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் முன்னைவிட அதிகரித்துள்ளன.
இந்திய நடுவண் அரசின் கொள்கையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சமாதான வழிமுறையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்தியா, மறுபுறத்தில் சிங்கள தேசத்திற்குப் படைத்துறை உதவிகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள இன்றைய தருணத்தில் தமிழர் தாயகத்தில் நடைபெறும் இன அழிப்பு போரை உடன் நிறுத்தவும், இது தொடர்பிலான இந்திய நடுவண் அரசின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் மேலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.