Publish Date: Sat, 10 Jan 2009 (19:43 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:38 IST)
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ள பர்வேஷ் முஷாரஃப், அப்படி ஏதேனும் ஒரு நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால், அதற்கு முழு அளவிலான பதிலடியை கொடுக்கும் அளவிற்கு பாகிஸ்தானிடம் போதுமான படைப்பலம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் போர் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது என்றும், அரசியல் வசதிக்காக அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிடுவதை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இப்பொழுதுள்ள பிரச்சனையை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சமாளிக்கட்டும், அதனை சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம் என்றும் முஷாரஃப் கூறியுள்ளார்.