Publish Date: Thu, 08 Jan 2009 (16:41 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (16:40 IST)
நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அர்ச்சகர்களை, அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டா மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளார்.
நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்நாட்டில் ஆட்சி செய்து வரும் மாவோயிஸ்ட் கட்சியினர், அந்நாட்டில் நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நடவடிக்கைகளை மாற்றியைக்கும் விதமாக பசுபதிநாதர் கோயிலில் பணிசெய்து வந்த இந்திய அர்ச்சகர்களுக்குப் பதிலாக நேபாளத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களை நியமித்து மாவோயிஸ்ட் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, பல இடங்களில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தது. இந்நிலையில் நேற்றிரவு நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரச்சண்டா, பசுபதிநாதர் கோயிலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அர்ச்சகர்களை தற்காலிகமாக மீண்டும் நியமிப்பதுடன், அக்கோயிலில் வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புத்தாண்டு தினத்தன்று தங்களால் நியமிக்கப்பட்ட நேபாள அர்ச்சகர்களுடன், பசுபதிநாதர் கோயில் பூட்டை உடைத்து, மாவோயிஸ்ட் தொண்டர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.