Publish Date: Thu, 08 Jan 2009 (17:28 IST)
Updated Date: Thu, 08 Jan 2009 (16:41 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில், இந்திய அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜைதான் என அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் நேற்றிரவு அளித்துள்ள பேட்டியில், அஜ்மல் கஸாப் பாகிஸ்தான் பிரஜை என்பதை உறுதி செய்கிறோம். எனினும், அதுதொடர்பான புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரத் தொகுப்பில், கஸாப் வாக்குமூலமும் அடங்கியுள்ளது. எனினும், அதனைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், கஸாப் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்டது எனக் கூறியதுடன், அவர் பாகிஸ்தான் பிரஜை அல்ல என்றும் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில், கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதை அந்நாட்டு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கஸாப்புக்கு சட்ட ரீதியான உதவிகளை பாகிஸ்தான் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.