Publish Date: Tue, 06 Jan 2009 (14:46 IST)
Updated Date: Tue, 06 Jan 2009 (14:45 IST)
கௌதமாலாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு அப்பகுதியில் வசித்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
கௌதமாலா புறநகர்ப் பகுதியில் உள்ள அகில் கிராண்ட் கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக முக்கிய நெடுஞ்சாலை சுமார் ஒரு கி.மீ. நீளம் வரை மண்ணில் புதைந்தது.
இதில் அப்பகுதி வசித்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், நெடுஞ்சாலையில் பயணித்தவர்கள் என 35 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து 165 பணியாளர்கள் அடங்கிய மீட்புக்குழு மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடி வருபவர்களை மீட்கும் பணியில் நேற்றிரவு முதல் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் நடந்து வந்த பராமரிப்பு பணியின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என மீட்புக்குழுவின் தலைவர் ஏஞ்சல் எஸ்ட்ரடா சந்தேகம் தெரிவித்துள்ளார்.