Publish Date: Fri, 02 Jan 2009 (17:17 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (17:16 IST)
நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலுக்குள் தாங்கள் நியமித்த அர்ச்சகருடன் மாவோயிஸ்ட் தொண்டர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி ஏராளமான கலவரத் தடுப்பு காவல்துறையினரை அந்நாட்டு அரசு கோயிலில் குவித்துள்ளது.
பசுபதிநாதர் கோயிலில் கடந்த ஆண்டுகளாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பண்டிதர்களே அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் தொண்டர்களும் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் இளைஞர் பிரிவினரும், இந்திய அர்ச்சகர்கள் இக்கோயிலில் பூஜை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரையே கோயில் பூசாரியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பசுபதிநாதர் கோயிலின் முக்கிய நுழைவாயிலின் பூட்டை உடைத்து, தாங்கள் நியமித்ததாகக் கூறப்படும் அர்ச்சகருடன் கோயிலின் உள்ளே நுழைந்தனர்
இது கோயிலுக்கு அருகே வசித்து வந்த ஹிந்து அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலவரத் தடுப்புப் காவல்துறையினரை அந்நாட்டு மாவோயிஸ்ட் அரசு கோயிலுக்குள் குவித்துள்ளது.